
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜூனா இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆட்சிக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘சும்மா அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொன்னால் சொர்க்கம் செல்ல முடியாது. அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது’ என்று பாராளுமன்றத்திலேயே பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
அந்த அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டம்தான் பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட பல ஏழைத்தாயின் மகன்களும் அரசியல் அதிகாரத்தை அடையக் காரணம். அதுவே, இன்று அனைவரும் பரவலாக அரசியல் உரிமைகளைப் பெற வழிவகுத்தது. கடவுளின் பெயரைச் சொல்லிச் சொர்க்கம் செல்பவர்கள் செல்லட்டும்.
ஆனால், புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்த சட்டத்தின் வழியில் சட்டமன்றம், பாராளுமன்றம் சென்று மக்களுக்கான அதிகாரத்தை வென்றறெடுக்கவும், எல்லோருக்குமான அரசு, சமதர்ம சமூகத்தை உருவாக்கவும் அரசியல் அமைப்பு காட்டிய சட்ட வழியில் பயணிப்போம்.
எனவே நாங்கள் உரக்கச் சொல்கிறோம், வாழ்க புரட்சியாளர் அம்பேத்கர்!



