Advertisements

திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்த போது தன்னை வரவேற்க அண்ணா அறிவாலயத்தில் யாரும் இல்லாததால் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளே செல்லாமல் வீட்டிற்கு திரும்பிச் சென்றது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக மகளிரணி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைப்பு ரீதியாக உள்ள திமுக மாவட்ட மகளிரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் திமுக மகளிரணி தலைவி கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள். தவெக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் பெருகிவிட்டன. தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருந்துகின்றனர்.
நான் முதல்வராக இருந்த போது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது விஜய், என்னை பார்த்து, “அமலாக்கத் துறை வழக்குகளில் இருந்து தப்பிக்கத்தானே மோடியை சந்தித்தீர்கள்” என கேட்டார். இப்போது நான் கேட்கிறேன், கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கத்தானே மோடியை சந்தித்தீர்கள். இப்படியெல்லாம் கேட்டு தரம் தாழ்ந்த அரசியலை நான் செய்ய மாட்டேன்.
திமுக பெற்ற வாக்குகளுக்கு மகளிரணியும் முக்கிய காரணம். திமுக ஆளுங்கட்சியாக மாற வேண்டும் என்றால் இன்னும் சுறுசுறுப்பாக வேகமாக செயல்பட வேண்டும். தவெகவிற்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களும் கவலையில் உள்ளனர். தவெக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துவிட்டன.
அதிமுக எம்எல்ஏகேகளை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார் விஜய். கை விரலில் வைத்த மை அழியும் முன்னே ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். வெற்றி பெற்று ஒரே மாதத்தில் தவெகவிற்கு ஆதரவு கொடுக்கிறார்களே, அப்படி என்ன ஆஃபர் கொடுத்தது தவெக?
தி.மு.க மீண்டும் ஆளும் கட்சியாக மாற சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்.. த.வெ.க நிர்வாகிகளே பாலி**ல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். எல்லா கூட்டங்களிலும் கான்ஃபிடன்ட்டா இருங்கன்னு விஜய் கூறுகிறாரே, முதலில் அவரிடம் கான்ஃபிடன்ட் இருக்கிறதா? என ஸ்டாலின் பேசியிருந்தார். மேலும் லட்சக்கணக்கான இளம்பெண்களை திமுக நோக்கி மகளிரணியினர் இழுக்க வேண்டும் என்றும் பேசியிருந்தார்.
இந்த கூட்டத்திற்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வந்திருந்தார். பொதுவாக பொதுச் செயலாளர், பொருளாளர் என யாராவது கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தால், அவர்களை வரவேற்க யாராவது வருவது வழக்கம். ஆனால் துரைமுருகன் அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற போது அவரை வரவேற்க யாரும் இல்லை. இதையடுத்து அவரை கைத்தாங்கலாக ஒருவர் அழைத்துச் சென்றார்.
ஆனாலும் அங்கு நிறைய கூட்டம் இருந்ததால் துரைமுருகன் உள்ளே செல்லாமலேயே காரில் புறப்பட்டு சென்றுவிட்டார். திமுக பொதுச் செயலாளர் பதவி வகிக்கும் துரைமுருகனிடம் இருந்து வயோதிகம் காரணமாக அந்த பதவியை வேறு ஒருவருக்கு கொடுக்க திமுக தலைமை முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அவரது பதவியை பிடிக்க திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் போட்டி போடுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் கட்சித் தலைமை இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
Advertisements



