bjp:எஸ்.பி வேலுமணியின் அதிமுக- பாஜக கூட்டணி கருத்துக்குத் தமிழிசை ஆதரவு!

Advertisements

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டார். அதற்கு முன் செய்தியாளர்களுக்குப் பதில் அளித்தார்.

அப்போது அண்ணாமலை,” பாஜகவுடன் அதிமுக இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளைப் பிடித்திருப்போம் என எஸ்.பி. வேலுமணி சொல்கிறார். ஆனால், அதிமுக-வின் மற்ற தலைவர்கள் பாஜக உடன் நாங்கள் இல்லை என்றனர். இதனால் எஸ்.பி. வேலுமணி கூறியதை பார்க்கும்போது, அதிமுக கட்சியில் எடப்பாடி- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது” என்றார்.

தொடர்ந்து, அண்ணாமலையின் பேட்டிக்கு அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு பதிலடி கொடுத்துள்ளது. அதில், அ.தி.மு.க. குறித்தோ, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லையெனக் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி கூறிய கூட்டணி தொடர்பான கருத்துக்குத் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழிசை கூறுகையில், “அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் 35 இடங்கள் கிடைத்திருக்கும் என்ற வேலுமணியின் கருத்து உண்மையே.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் திமுக இத்தனை இடங்களைப் பெற்றிருக்க முடியாது. அதிமுக குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு அவரிடமே விளக்கம் பெறுங்கள்.

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நான் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. கூட்டணி என்பது அரசியல் வியூகம். 2026 தேர்தல்குறித்து முடிவு செய்ய நிறைய கால அவகாசம் உள்ளது.

பாஜக ஐடி விங், அண்ணாமலை வார் ரூம் நிர்வாகிகளை எச்சரிக்கிறேன். கட்சியின் பிற தலைவர்கள்மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன்.

ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *