Winter Storm Warning: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள  ‘மிக்ஜம்’ புயல் காரணமாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 3-ந்தேதி வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என்று பெயரிடப்பட உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 900 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 800 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாகவும், அதன்பின் புயலாக மாறி தெற்கு ஆந்திரா- வட தமிழகத்தில் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 4-ம் தேதி மாலை கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, காரைக்கால், புதுச்சேரி, தூத்துக்குடி, கடலூர், நாகை, பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளதை குறிக்கும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மேலும், சூறைக்காற்று வீசுவதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *