
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் இருந்து வெளியேறிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பி உள்ளார். இலங்கையில் தங்கியுள்ள அவருக்கு , அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு உள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் கடந்த ஜூலை மாதம் 9 ஆம் தேதி தீவிரமடைந்த நிலையில் அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே உடனடியாக பதவி விலக வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசமடைந்ததை அடுத்து கடந்த ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் இலங்கையை விட்டு தப்பியோடினார். இலங்கையில் இருந்து மாலத்தீவு சென்ற கோத்தபயா ராஜபக்சே பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து சென்று வசித்துவந்தார்.
இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார். தாய்லாந்தில் இருந்து இலங்கையில் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திற்கு கோத்தபய ராஜபக்சே வந்தடைந்தார். இலங்கை வந்த கோத்தபயவை ராஜபக்சேவை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றனர். அவர் தற்போது கொழும்புவின் விஜிர்மா மாவதா பங்களாவில் தங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



