
இணைய தளத்தை முடக்கியவர்கள் யார்? விசாரணை தீவிரம்…
சென்னை: தமிழக காவல் துறையின் கிரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் என்ற பெயரில் (சி.சி.டி.என்.எஸ்.) இணைய தளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணைய தளத்தைத் தென் கொரியாவிலிருந்து சைபர் கிரைம் குற்றவாளிகள் முடக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகப் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது போன்று இனி ஒருமுறை இணையதளத்தை முடக்க முடியாத அளவுக்குரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள 1½ லட்சம் போலீசாரின் சம்பளம் தொடர்பான தகவல்களும் இணையதளத்தில் உள்ளன. இதுதவிர காவல் துறை தொடர்பான பல்வேறு தகவல்களும் இடம் பெற்றிருந்தன. நேற்று காலையில் முடக்கப்பட்ட இணையதள சேவை இரவில்தான் சரிசெய்யப்பட்டதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தென்கொரியாவிலிருந்து போலீஸ் இணைய தளத்தை முடக்கியவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



