
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளையில் விஜய் பிரசார கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக காலை 8.30 மணியளவில் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் விஜய் புறப்பட்டார். தவெக தொண்டர்களோ அதிகாலை முதலே விஜய் பிரசார கூட்டம் நடைபெறும் இடத்தில் குவிந்துள்ளனர்.
பிரசார கூட்ட இடம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு இரும்பு தடுப்புகளால் தடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புகளுக்குள் தவெக தொண்டர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கே பந்தல் எதுவும் போடப்படவில்லை; நாற்காலிகளும் போடவில்லை. இதனால் அதிகாலை முதலே தவெக தொண்டர்கள் கால்கடுக்க நின்று வருகின்றனர். பெண்களும் ஏராளமான எண்ணிக்கையில் காலை முதலே இரும்பு தடுப்புகளுக்குள் அடைக்கப்பட்டிருந்தனர். கரூர் சம்பவத்தின் போது தொண்டர்கள் அங்கிருந்த மரங்கள், கட்டவுட்கள், மின் கம்பங்களில் ஏறியதால் இந்த முறை விபரீதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைளை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக தொண்டர்கள் பேனர் மீது ஏறாமல் இருக்க பிளக்ஸ்க்கு கீழே இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டிருந்தன. அனுமதிக்கப்பட்ட வழியைத்தவிர மற்ற வழிகளில் தொண்டர்கள் நுழையாமல் இருக்க முள் கம்பிகள் கொண்டு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன . மரத்தில் ஏறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் மரத்தின் அருகே போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு கூட்டம் முடிந்ததும் கோபிச்செட்டி பாளையத்திலுள்ள தனது வீட்டுக்கு லஞ்சுக்கு விஜய்யை அழைத்து செல்ல செங்கோட்டையன் ஏற்பாடு செய்துள்ளார். இது பற்றி விஜய்யிடம் செங்கோட்டையன் கேட்ட போது, விஜய்யோ, ‘அண்ணே.. இப்ப வந்தா கூட்டத்தை கண்ட்ரோல் பண்ண முடியாது.. பிரசாரத்துக்கு கோபிக்கு வரும் போது கண்டிப்பாக வீட்டுக்கு வர்றேன்னு வாக்குறுதி கொடுத்துள்ளார்.


