
பொதுவெளியில் கூட்டணி கட்சிகள் அவமதிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என நாடளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக-காங்கிரஸ் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. திமுக மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளபதி, ‘வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்’ என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் நாடளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது சமூக வலைத் தளப்பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதில், திமுக சட்டமன்ற உறுப்பினர் தளபதி தேவையில்லாமல் தன்னை வம்புக்கு இழுக்கக்கூடாது என்றும் தன்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை தலைவர் ராகுல்காந்தி முடிவுசெய்வார் என்றார்.
காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதல்-அமைச்சரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள் என்று குறிப்பிட்டார்.


