
இந்திய மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் கே.சி.வேணுகோபால் தலைமையில் அக்கட்சியில் இணைந்தனர்.
அண்மையில் பாரிஸ் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். இறுதியில் தங்கப் பதக்கத்திற்கான போட்டிக்கு முன்பாக அவரது உடல் எடை பரிசோதிக்கப்பட்ட போது அதில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவர் ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுது்தியது. மேலும் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் அதற்குரிய சன்மானம் வழங்கப்பட வேண்டும் என்று பலரும் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர். ஆனால், அது எதையும் ஒலிம்பிக் கமிட்டி பொருட்படுத்தவில்லை.
இதனைத் தொடர்ந்து அவருக்கு நாட்டு மக்கள் பலரும் ஒன்றிணைந்து இணையதளம் வாயிலாக தங்களது ஆதரவையும், ஆறுதலையும் தெரிவித்தனர். மேலும் வினேஷ் போகத்திற்கு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு வழங்கப்படும் அனைத்து மரியாதையும் வழங்கப்படும் என்று ஹரியானா மாநில அரசு தெரிவித்தது.
இது ஒருபுறம் இருக்க வினேஷ் போகத்தும், மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரை நேரில் சந்தித்தனர். இதனால் இவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறார்கள் என்ற கருத்து பரவத் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக வினேஷ் போகத் ஹரியானா மாநிலத்தில் தான் வகித்து வந்த ரயில்வே பணியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் தங்களை கட்சியின் இணைத்துக் கொண்டனர்.


