
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக அ.தி.மு.க. வர்த்தக அணியின் மாவட்ட இணை செயலாளர் மகேந்திரன் தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அ.தி.மு.க. வர்த்தக அணியின் மாவட்ட இணை செயலாளராக இருந்தார். தீவிர அ.தி.மு.க. விசுவாசியான இவர் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்ததாலும், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாகவும் கடும் அதிர்ச்சியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
அதில், அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்றும் அ.தி.மு.க தோற்றுப் போனது வேதனை அளிக்கிறது என்றும் வலியுறுத்தினார். தனது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். இதனை பார்த்ததும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து, திருப்பனந்தாள் அருகே பாலூர் என்ற இடத்தில் எரிந்த நிலையில் அவரது உடலை காவல்துறையினர் மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் திருப்பனந்தாள் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. நிர்வாகி மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பனந்தாள் வருகை தந்தார். அப்போது, மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி மகேந்திரன் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.இதன் பின்னர், அதிமுக பொதுச்
செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, மகேந்திரனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று தெரிவித்தார். மகேந்திரனின் குழந்தைகள் செலவை அதிமுகவே ஏற்கும் என்று கூறினார். அதிமுக தொண்டர்கள் யாரும் இது போல விபரித முடிவை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
அதிமுகவின் சார்பில் 55 லட்சம் ரூபாய் மகேந்திரனின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.



