
குடியரசு தினத்தன்று (26.01.2024) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம சபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான நாட்களில் நடைபெறுவது வழக்கம். இந்தியக் குடியரசுத் தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி தினம் ஆகிய ஆறு சிறப்பு நாட்களின்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை கூட்டப்படுகிறது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிடுள்ள அறிக்கையில்; குடியரசு தினத்தன்று (26.01.2024) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றிக் குடியரசு தினத்தன்று காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
வருகின்ற 26ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாகக் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



