
கற்கொள்ளையர்களையும், செய்தியாளர்களைத் தாக்குபவர்களையும் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்காமல், மக்களோடு மக்களாக, மக்களுக்குக் காவலாக இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதியில் நடைபெற்றது. அப்போது பேசிய தவெக தலைவர் விஜய், கற்கொள்ளையர்களையும், செய்தியாளர்களைத் தாக்குபவர்களையும் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்காமல், மக்களோடு மக்களாக, மக்களுக்குக் காவலாக இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த வேட்பாளர்களைச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்க வேண்டியது மக்களின் பொறுப்பு என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் நால்முனைப் போட்டி எல்லாம் இல்லை என்றும், மக்கள் நலனுக்கான தவெகவுக்கும், மக்கள் விரோத ஆட்சி செய்யும் திமுகவுக்கும் இடையே இருமுனைப் போட்டி நிலவுவதாகவும் விஜய் கூறினார்.
வேட்பாளர் பட்டியலை விஜய் அறிவிக்குமுன் அனைவரையும் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளச் செய்தார். அப்போது, மக்களுக்காக மக்கள் பணிக்காக மட்டுமே நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றும், நான் வெற்றிபெற்ற பிறகு மக்கள் பணத்தில் ஒரு காசுகூடத் தொடமாட்டேன் என்றும், ஊழல் ஒழிப்பு, போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பாடுபடுவேன் என்றும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பேன் என்றும், ஒருநாளும் மக்கள்விரோதச் செயலில் ஈடுபட மாட்டேன் என்றும் உறுதிமொழி ஏற்கச் செய்தார்.



