
மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளில் தனது வணக்கங்களைச் செலுத்துவதாகத் தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளில் தனது வணக்கங்களைச் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகத் திகழ்ந்தவர் என்றும், ஏழை, எளிய மக்களின் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில், ஏழை மக்களின் மீது கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாக வாழும் தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவரது கனவுகளை நனவாக்க உழைத்து வரும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தளப் பதிவில், மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளில், அவரது கலைத்துறைச் சாதனைகளையும், பொதுவாழ்வில் தமிழக மக்கள் மீது அவர் காட்டிய பேரன்பையும் நினைவுகூர்வதாகத் தெரிவித்துள்ளார். மண்ணை விட்டு மறைந்தாலும், ‘கேப்டன்’ என்ற பெயரும், அவரது புகழும் காலம் கடந்து நிலைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


