
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில், தமிழர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெள்ளத்தில் 17 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்திற்கு புனிதப் பயணம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர், ராசுவா மாவட்டத்தின் திமுர் பகுதியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இதனிடையே, கும்பகோணத்தைச் சேர்ந்த 22 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்டவர்கள் நேபாள ராணுவ முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மற்ற தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறையும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்தும் தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பெருவெள்ளத்தால் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 19 பாலங்கள், 40 கிலோமீட்டர் சாலைகள் மற்றும் 200 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
நேபாள வெள்ளம் தொடர்பாக உதவி தேவைப்படும் தமிழர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்பு கொள்ள தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.
கட்டணமில்லா உதவி எண்: 1800 309 3793
தொடர்பு எண்: 80690 09901
மிஸ்டு கால்: 080690 09900
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



