
அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என்று சொன்ன விஜய் , இப்போ ஜனநாயகன் படம் லீக் – ஆன பிரச்சினையால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்படப்போகும் நஷ்டத்தை ஈடுகட்ட, விஜய் மீண்டும் அவருக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்கலாம் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் ஓங்கி ஒலிக்கிறது.இது சார்ந்த தகவல்களை தற்பொழுது நாம் விரிவாகப் பார்க்கலாம்..!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரைக்கு வரும் முன்பே பல சோதனைகளைச் சந்தித்து வருகிறது. முதலில் இந்த படம் பொங்கல் ரிலீஸ் எனத் திட்டமிடப்பட்டு, விளம்பரப்படுத்தப்பட்டது. விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், இது அவரது கடைசி திரைப்படம் என விளம்பரப்படுத்தப்பட்டது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது.
ஜனவரி 13-ல் வெளியாக வேண்டிய இந்த ‘ஜனநாயகன்’, சென்சார் சிக்கலில் மாட்டியது. உரிய நேரத்தில் சென்சார் கிடைக்காததால் படம் ரிலீஸ் ஆகவில்லை.. அதன் பிறகு படக்குழுவினர் நீதிமன்ற கதவுகளைத் தட்டிய போதிலும், அவர்களுக்குச் சரியான தீர்வு கிடைக்கவில்லை. படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்துவிட்டதாகச் சொல்லப்பட்டாலும் இதுவரை சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. விஜய் அரசியலில் உள்ள சூழலில், தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் இருப்பதால் அந்த விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகே இந்த விவகாரத்தில் முடிவு கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
சென்சார் பிரச்சனை ஓய்வதற்குள் முழு படமும் இணையத்தில் கசிந்தது. வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் இருந்த நிலையில், முதலில் படத்தின் ஒரு சில காட்சிகள் இணையத்தில் வெளியானது. தொடர்ந்து மொத்த படமும் வெளியானது.. படக்குழு சைபர் கிரைம் உதவியுடன் லிங்குகளை நீக்கினாலும், அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டன. இது தொடர்பாக உதவி எடிட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட, ஏற்கனவே இது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. இது படத்தின் தியேட்டர் வசூலைக் கடுமையாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
தற்போது முழுநேர அரசியலில் இறங்கியிருக்கும் விஜய், இந்தப் படத்தோடு சினிமாவுக்கு ‘குட்பை’ சொல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், லீக் பிரச்சினையால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படப்போகும் நஷ்டத்தை ஈடுகட்ட, விஜய் மீண்டும் அவர்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்கலாம் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் ஓங்கி ஒலிக்கிறது. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாகக் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவின. விஜய் சீக்கிரமே அடுத்த படத்திற்குக் கதையைக் கேட்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதில் , விஜய் அடுத்த படத்தில் நடிப்பார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் படம் ரலிஸ் ஆகி.. படத்தின் வசூல் முடிவுகளைப் பொறுத்தே விஜய் முடிவு அமையும் என்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், “படம் லீக் ஆனதால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிடும் என இப்போதே சொல்ல முடியாது. தெலுங்கில் ‘பவன் கல்யாண்’ படமும், மலையாளத்தில் ‘பிரேமம்’ படமும் ரிலீஸிற்கு முன்பே லீக் ஆனது. ஆனாலும், இரு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றன. படம் முறையாகத் திரைக்கு வந்து, அதன் இறுதி வசூலைப் பார்த்த பிறகே நஷ்டத்தின் அளவு தெரியும். அதன் பிறகுதான், விஜய் மீண்டும் ஒரு படம் பண்ணலாமா அல்லது வேறு எப்படி ஈடுகட்டலாம் என முடிவெடுப்பார். இப்போதைக்கு அவர் முழு அரசியல்வாதியாக மாறிவிட்டார், மீண்டும் நடிக்க வருவாரா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிவிட்ட சூழலில், ‘ஜனநாயகன்’ படத்தின் வெற்றி அவருக்கு மிக முக்கியமானது. தனஞ்செயன் குறிப்பிட்டது போல, ஒருவேளை படம் வசூலில் சறுக்கினால், தயாரிப்பாளருக்காக விஜய் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கலாம்.. பவன் கல்யாண் போல அரசியலிலும் சினிமாவிலும் விஜய் இரட்டை சவாரி செய்வாரா அல்லது ‘ஜனநாயகன்’ படத்தோடு விடைபெறுவாரா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லிருக்காரு…



