
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில், மாலைவேளையில் அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், ஓய்வு எடுப்பதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், அவரது குடும்பத்துடன் வந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகையும் தனது குடும்பத்தினரோடு எரிச்சலையில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். இந்தநிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தனது குடும்பத்தினருடன் பழனியில் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு, கொடைக்கானல் ஏரி சாலையில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதிக்கு சாலை மார்க்கமாக வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து, மாலை வேளையில் நட்சத்திர ஏரியில் தன்னுடைய குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தார். மேலும் படகு குழாம் அருகே வந்திருந்த சுற்றுலா பயணிகளுடன், புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், அங்கிருந்து தங்கும் அறைக்கு சென்றார். தற்போது கோடை சீசன் தொடங்கிய நிலையில், பல முக்கிய பிரமுகர்கள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


