அயோத்தியை போல் குஜராத்திலும் பா.ஜ.க.வைக்காங்கிரஸ் தோற்கடிக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காந்திநகர்:குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சி தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-
“ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அயோத்தியைச் சேர்ந்த நபர் ஒருவர் கூட அழைக்கப்படாததைக் கண்டு அயோத்தி மக்கள் கோபமடைந்தனர். பிரதமர் மோடி அயோத்தியில் போட்டியிட விரும்பினார். ஆனால் அங்குப் போட்டியிட்டால் அவர் தோற்கடிக்கப்படுவார் என்றும், அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று மோடியின் ஆலோசகர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அகமதாபாத்தில் உள்ள நமது கட்சி அலுவலகத்தைச் சேதப்படுத்தியதன் மூலம் பா.ஜ.க.வினர் நமக்குச் சவால் விடுத்துள்ளனர். அவர்கள் நமது அலுவலகத்தை உடைத்தது போல், நாம் ஒன்றாகச் சேர்ந்து அவர்களின் அரசாங்கத்தை உடைக்கப் போகிறோம். அயோத்தியில் நடந்ததைப் போல் குஜராத்திலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு நரேந்திர மோடியையும், பா.ஜ.க.வையும் தோற்கடிக்கும் என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். “இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

