
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பலத்துடன் நிற்கிறார்கள். தவெக வருகை இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஆஸ்திரேலியா செல்வதாக வெளியாகி வரும் தகவலுக்கு தவெக ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார். தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்னையில் செய்தியாளர்ளைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக ரூ.5,000 பணத்தை ஓட்டுக்காக வழங்கியுள்ளது. மக்கள் அதை தூக்கி எறிந்து மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள்.
தவெகவில் ஓட்டுக்கு பணம் என்கிற எந்த செயலிலும் ஈடுபடவில்லை. தலைவர் மாற்றத்திற்காக ஒரு ஜனநாயக புரட்சியை தொடங்கியுள்ளார்.எங்கள் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து புரட்சி ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு கிடைக்கும்.. மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன.
அந்த மக்கள் கடமைகளை பற்றி எங்கள் தலைவர் சிந்தித்து கொண்டிருக்கிறார். இப்போதும் கட்சிக்கான பணியில் தான் இருக்கிறார்.வாக்கு எண்ணிக்கையின்போது எப்படி செயல்பட வேண்டும் என்று நேற்று தான் எங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். எல்லா வேட்பாளர்களுக்கும் எங்கள் தலைவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தவெக எப்போதும்போல வலிமையுடன் இருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின்போது மொத்த நாடே ஸ்தம்பிக்குமளவுக்கு மாற்றம் இருக்கும். 50 வருடங்களுக்கு பிறகு மக்களுக்கு மாற்றம் வேண்டும் என்கிற மிகப்பெரிய உணர்வு ஏற்பட்டுள்ளது.மக்கள் மாற்றத்திற்கான முடிவை தருவார்கள். தொலைக்காட்சி விவாதத்தில் பேசி திமுக போல நேரத்தை வீணடிப்பதற்கு தயாராக இல்லை. வருகிற மே 4 ஆம் தேதி தமிழக மக்களின் மாற்றத்தை காண்பார்கள்.
திமுக தோல்வியடையும் நேரத்தில் ரவுடியிசத்தை கையில் எடுப்பார்கள். சேகர்பாபு ரவுடிகளை அழைத்து எங்கள் வேட்பாளர், வழக்கறிஞர்களை தாக்கியுள்ளனர்.விஜய் ஆஸ்திரேலியா செல்வதாக பரப்பி கொண்டிருக்கிறார்கள். அவர் ஆஸ்திரேலியா செல்லவில்லை. விஜய் நாளைக்கு நிலாவிற்கு செல்கிறார்.
திமுக தான் ராக்கெட் ஏற்பாடு செய்துள்ளது. அந்த புரளிகளுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம். திமுக ஆட்சியில் இருக்கும்போது தான் புரளிகளை பரப்பிக் கொண்டிருந்தனர். அதுதான் திமுக ஆட்சி முடிந்துவிட்டதே” என்றார்.


