
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் விஜய்யின் தவெகவிற்கு 108 தொகுதிகள் தான் உள்ளது. இன்னும் 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையாக உள்ளது. இந்நிலையில் தான் விஜய்யின் தவெகவிற்கு முதல் ஆளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுப்பது பற்றி விவாதிக்க செயற்குழு கூட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், இன்று வெளியான தேர்தல் முடிவில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தவெக தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. அதேவேளையில் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. விஜய் ஆட்சியமைத்து முதல்வராக வேண்டும் என்றால் இன்னும் 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையாக உள்ளது..
இதனால் விஜய்யின் தவெக பிற கட்சிகளிடம் ஆதரவு கோரும் வகையில் காய்களை நகர்த்தி வருகிறது. திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி. இதனால் 2 கட்சிகளிடமும் கேட்க முடியாது. அதிமுகவிடம் கேட்கலாம் அவர்களின் ஓட்டுகளை கணிசமாக விஜய் கொங்கு மண்டலத்தில் பிரித்து பல தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி சம்மதிப்பது கடினம்.அதேவேளையில் அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளிடம் தவெக ஆதரவு கோர திட்டமிட்டுள்ளது.
அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 5 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகளில், தேமுதிக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாமக 4 தொகுதிகளிலும், அமமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றள்ளது. இந்த கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்க வாய்ப்புள்ளது.. இந்நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளது. தேர்தலில் மொத்தம் 5 தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட நிலையில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் அதுபற்றியும் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் விஜய் முதல்வராக தவெகவிற்கு ஆதரவு அளிப்பது பற்றி விவாதிக்கப்பட வாய்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த செயற்குழுவில் விஜய்க்கு ஆதரவு வழங்க ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு வழங்குவார்கள். கீழ்வேளூர் தனி தொகுதியில் லதா என்பவர் 56,108 வாக்குகள் வாங்கி தவெக வேட்பாளர்கள் செந்தில் பாண்டியனை 2,278 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளார். செந்தில் பாண்டியன் மொத்தம் 53,830 வாக்குகள் வாங்கி தோல்வியடைந்தார்.
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்லசாமி 68,938 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். இங்கு தவெக வேட்பாளர் கிருஷ்ணகுமார் 53,369 வாக்குகள் வாங்கி தோல்வியடைந்தார். ஒருவேளை இவர்கள் 2 பேரும் தவெகவிற்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் மெஜாரிட்டிக்கான 118 மேஜிக் நம்பரை எட்ட தவெகவிற்கு இன்னும் 9 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.




