
பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை, வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை என்று சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில், முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு வெற்றி என பெயர் மாற்றி உள்ளீர்கள் என்றும், தமிழ்நாட்டில் உள்ள 40-ஆயிரம் அரசு பள்ளிகளிலும் தரமும் உயர்த்தப்பட வேண்டும்.
அதற்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். அவையில் திறம்பட பேசும் அமைச்சர் ராஜ்மோகன், 40-ஆயிரம் பள்ளிகளுக்கு தேவையான நிதியை கேட்டுப் பெறுவார் என நம்புகிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும் என்றும், தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது,
பேச வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில் 13-லட்சத்து 30-ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றும், காலி பணியிடங்களை படிப்படியாக நிரப்பினால்தான் அரசின் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் ஆட்சிக்கு வந்தவுடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனக் கூறினீர்கள், அதனை செயல்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறை நிறுவனங்களில் ஒன்றரை லட்சம் காலிப்பணியிடம், மின்சாரத்துறையிலும் பல காலிப்பணியிடங்கள் உள்ளன.
மின்துறையில் அதிக காலிப்பணியிடங்கள் இருப்பதன் காரணமாகத்தான் அதிக மின்தடைகள் ஏற்படுகிறது என்றும் தட்கல் முறையில் விண்ணப்பித்து காத்திருக்கும் 65-ஆயிரம் விவசாயிகளுக்கு உடனடியாக பம்பு செட் தரப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொரோனா காலத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசு அதிமுக எனவும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்திய அதிமுக ஆட்சி காலத்தில், கடன் சுமை குறைவாக இருந்தது. சொத்து வரி குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.



