
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்விற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் 2026-2027-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கோ.க.அருண்ராஜ், அரசின் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார்.
அப்போது, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முறை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றும், தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள், கிராமப்புற மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் ஆகியோரின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை இத்தேர்வு முறை பெரிதும் பாதிக்கிறது
என்றும், நீட் தேர்விற்காக வரம்பின்றி அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருகுவதற்கு வழிவகுத்துள்ளது என்றும், மாணவர்களின் கவனத்தை பள்ளிப் பாடத்திட்டத்தைப் பயில்வதில் இருந்து திசைதிருப்பி, நீட் பயிற்சியில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்த கட்டாயப்படுத்துகிறது என்றும், இதனால் நீட் தேர்வு அக்கற்றப்பட வேண்டும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
இந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார். மற்ற கட்சிகள் இந்த அரசின் தனித்தீர்மானத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து நீட் தேர்விற்கு எதிராக கொண்டு வரப்பட்ட அரசின் தனித்தீர்மானம், சட்டசபையின் முடிவிற்கு விடப்பட்டது. மறுப்போரே இல்லை என்பதால், தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.





