
அரியலூர்: ஹிந்து மதத்தைப் பற்றியும், ஹிந்து கடவுள்கள் பற்றியும் அடிக்கடி அவதூறாகப் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தேர்தல் வந்தவுடன் அரியலூரில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தி பரவசத்துடன் வழிபாடு நடத்தியுள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பலமுறை ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்விதமாகவும், ஹிந்து மதத்துக்கு எதிராகவும் பேசி வருகிறார். அதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தாலும், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வாய் திறப்பதில்லை. இதனால், திருமாவளவனின் ஹிந்து எதிர்ப்பு நிலைப்பாடு குறைந்தபாடில்லை.
மேடைகளில் ஹிந்துக்கோயில்களை அவதூறாகப் பேசியும், ஹிந்து மதத்தை இழிவாகப் பேசியும் கூட்டத்திற்கு மத்தியில் முழங்கும் அவர், தனிப்பட்ட முறையில் கோயில் வழிபாடில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் வந்து விட்டால் இவருக்கு எங்கிருந்தோ ஹிந்து கடவுள்களின் நினைவு வந்து விடுகிறது. உடனே கோயில் கோயிலாகச் செல்கிறார்.
தற்போது பிரசாரத்திற்கு இடையே அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் உள்ள புகழ்பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் திருமாவளவன். அவருடன் திமுக அமைச்சர் சிவசங்கரும் இருந்துள்ளார்.
ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாகத் தனது சொந்த கிராமமான அங்கனூரில் உள்ள குல தெய்வமான மாயவன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டே வேட்புமனுத்தாக்கல் செய்தார் என்ற செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
இப்படி தேர்தல் நேரங்களில் ஹிந்து கோயிலுக்குச் செல்வதையும், கோயில்களில் சாமி தரிசனம் செய்வதையும்ம் வழக்கமாகக் கொண்டுள்ள திருமாவளவன், அரசியல் என வந்துவிட்டால் மட்டும் அதற்கு நேரெதிராக மாறி, அவதூறு பரப்பி அதனை ஓட்டுகளாக மாற்ற முயல்வதாகப் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.


