
அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரும் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, டெல்லி முதல்வர் பதவிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, டெல்லி முதல்வர் பதவிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது, துணைநிலை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்குத் தான் இதில் அதிகாரம் உள்ளது எனக் கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், மற்றொரு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்யமாட்டாரென அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றால்தான் ராஜினாமா செய்ய வேண்டும். ஜெஜ்ரிவால் ராஜினாமா செய்தால் டெல்லியில் ஆட்சியைக் கவிழ்பது பாஜகவுக்கு எளிதாகி விடும். எனவே, அவர் ராஜினாமா செய்யமாட்டாரென அவர் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

