
குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் புதுச்சேரி அரசு அமல் படுத்த கூடாது என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், நான்கு ஆண்டுகள் கழித்து கடந்த (மார்ச் 11, திங்கள்கிழமை) நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இத்தனை ஆண்டுக் காலம் அமைதியாக இருந்துவிட்டு, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது அமல்படுத்துவதன் நோக்கம் என்ன? எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் புதுச்சேரி அரசு அமல் படுத்தக் கூடாது என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சுதேசி பஞ்சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ பொழிலன், மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.


