
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் பியூஷ் கோயலின் எண்ணம் நிறைவேறாது என்றும், எத்தனை முனைப் போட்டி இருந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் மாநகரச் செயலாளர் செந்திலின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மேயர் திலகவதி ஆகியோர் கலந்துகொண்டு செந்தில் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, தமிழ்நாட்டில் அனைவரையும் ஒன்று சேர்க்கப் பியூஷ் கோயல் நினைப்பதாகவும், அவருக்குத் தமிழ்நாட்டு அரசியல் தெரியாது என்பதால் அவர் நினைப்பது நடக்காது என்றும் தெரிவித்தார்.
இருமுனைப் போட்டி இருந்தால் திமுகவை வீழ்த்தலாம் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளதற்குப் பதிலளித்த ரகுபதி, எத்தனை முனைப் போட்டி வந்தாலும் திமுக தான் வெற்றிபெறும் எனத் தெரிவித்தார்.

