
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் 9 பெண்கள் ஒரே மாதிரியாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
40 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட அந்த 9 பெண்களும் பெண்களும் அவர்கள் கட்டியிருந்த சேலையைக் கொண்டே கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். கொலைக்குப் பின் அவர்கள் அனைவரின் உடல்களும் ஒரே மாதிரியாகக் கரும்புத் தோட்டங்களிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாதம் 1 கொலையும், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் அடுத்தடுத்த கொலைகளும், நவம்பரில் 2 கொலைகளும் அரங்கேறியுள்ளது. 8 வது கொலைக்குப் பின்னர் , 300 போலீசை கொண்ட சிறப்புப் படை 14 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, மஃப்டியில் ரோந்து பணிவுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கடுத்து, கொலைகள் நடிப்பது நின்றுள்ளது. ஆனால் இந்தக் கொலைகளைச் செய்த நபரை [அல்லது நபர்களை] இன்னும் பிடிக்க முடியவில்லை.
அநேகமாகக் கொலையாளி உள்ளூர் வாசியாக இருக்க வாய்ப்புள்ளது எனப் போலீசார் கருதுகின்றனர். காவல்துறை ரோந்தின் காரணமாக இந்தக் கொலைகள் தற்காலிகமாக நின்றிருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் சேலையில் நெரித்துக் கொல்லப்பட்ட அனிதா என்ற 45 வயது பெண்ணின் உடல் கரும்புத்தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செர்கா பகுதியில் உள்ள பூஜ்யயா ஜாகிர் [Bhujiya Jagir] கிராமத்தில் கணவனுடன் வாழ்ந்து வந்த அனிதா கடந்த ஜூலை 2 ஆம் தேதி தனது பிறந்த ஊரான பதேகஞ்ச் கிர்கா [Fatehganj’s Khirka] கிராமத்துக்கு வந்துள்ளார். அங்கு, ஏடிஎம் -இல் பணம் எடுக்கச் சென்ற அனிதா அதன்பிறகு கரும்புத்தோட்டத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக உயர்மட்ட காவல் அதிகாரிகள் குழு விவாதித்து கொலையாளியைப் பிடிப்பதற்கான திட்டத்தை உருவாக்கி வருகிறது. உள்ளூர் மக்கள் சொன்ன அங்க அடையாளங்களின்படி மூன்று பேரின் உருவப்படத்தை வரைந்து அதன்மூலம் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளது போலீஸ்.



