
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், டெல்லியில் இன்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை அண்ணாமலை நேரில் சந்தித்துப் பேசினார்.
கடந்த சில மாதங்களாகவே அதிமுக கூட்டணி விவகாரம் மற்றும் அக்கட்சியின் தேசிய தலைமை எடுத்த சில முடிவுகளில் அண்ணாமலைக்குக் கடுமையான அதிருப்தி இருந்ததாகக் கூறப்படுகிறது.
கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அண்ணாமலையின் பிறந்தநாளை (ஜூன் 4) முன்னிட்டு, “எங்கள் தலைவரே வருக.. வழிநடத்துக..” என அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
கட்சித் தொடக்கம் குறித்த வதந்திகளுக்குப் பதிலளித்த அண்ணாமலை, “இன்னும் இரண்டு நாட்களில் விரிவாக அமர்ந்து பேசுவோம், பொறுத்திருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.


