
ஈரான் பேச்சுவார்த்தைக் குழுவினரைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட நிலையில், அதற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.”
ஈரான் – அமெரிக்கா போர், கடந்த வாரம் ஏற்பட்ட புரிந்துணர்வால் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது. இதனிடையே கத்தார் தலைநகர் தோஹாவிலும் இரு நாட்டு குழுக்கள் கூடி இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஈரான் பேச்சுவார்த்தை குழுவின் 2 முக்கிய பிரதிநிதிகளின் உயிரை பறிக்க இஸ்ரேல் சதித்திட்டம் தீட்டுவதாக அமெரிக்க உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில், ஈரான் குழுவில் இருக்கும் 2 முக்கிய தலைவர்களான வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபப் ஆகியோர் இஸ்ரேலால் குறிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. உயிர் பறிப்பு சம்பவம் அரங்கேறினால், அது அமைதிப் பேச்சுவார்த்தைகளை முற்றிலும் சீர்குலைத்துவிடும் என்று அமெரிக்க உயர் அதிகாரிகள் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்தியஸ்தர்கள் மூலம் தனிப்பட்ட முறையில் அமெரிக்கா இதுகுறித்து ஈரானுக்கு எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



