
தமிழக முதல்-அமைச்சர் விஜய் பற்றி அவதூறு பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்-அமைச்சர், சினிமா நடிகைகளோடு ஜாலியாக இருந்தார். அவரை கொண்டு வந்து சட்டசபையில் உட்கார வைத்த உடன் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதுதொடர்பாக த.வெ.க. கட்சி நிர்வாகிகள் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து, திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். அவரிடம், மாஜிஸ்திரேட் ஒன்றரை மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டு சொந்த ஜாமீனில் செல்லும்படி உத்தரவிட்ட அவர், 10 நாட்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி காவல்துறையினர் நெருக்கடி தருவதாகக் குற்றம் சாட்டினார். த.வெ.க.வில் சேரச்சொல்லி தன்னை நிர்பந்திக்கிறார்கள் என்று கூறினார். தான் ராஜினாமா செய்ய போவதில்லை என்றும் தி.மு.க.வில் உறுதியாக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.



