
ஏமன் தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் அதிக விலை கொடுக்கும் என்று ஹவுதி அமைப்பின் துணை வெளியுறவு மந்திரி ஹுசைன் அல்-எஸி தெரிவித்துள்ளார்.
லண்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன் எதிரொலியாகச் செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளிலிருந்து வரும் சரக்குக் கப்பல்கள்மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. ஏமன் நாட்டின் சதா, அல்ஹுதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து போர் விமானங்கள்மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், ஏமன் தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் அதிக விலை கொடுக்கும் என்று ஹவுதி அமைப்பின் துணை வெளியுறவு மந்திரி ஹுசைன் அல்-எஸி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;
“அமெரிக்கா, பிரிட்டிஷ் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களால் நடத்தப்பட்ட மிகப்பெரும் ஆக்கிரமிப்புத் தாக்குதலுக்கு நம் நாடு உட்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி, அமெரிக்காவும் பிரிட்டனும் அதிக விலை கொடுக்கத் தயாராக வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.




