
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு, மூன்றாம் வரிசையில் இருக்கையில் அமர்வு வழங்கப்பட்டது பேசுபொருளாகி உள்ளது.

வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ், கடந்த 21-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனிடையே, இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு, மூன்றாம் வரிசையில் இருக்கையில் அமர்வு வழங்கப்பட்டது பேசுபொருளாகி உள்ளது.

போப் பிரான்சிஸுக்கும் டிரம்ப்புக்கும் இடையில் சிறு மனக்கசப்பு இருந்து வந்ததாக, சமூக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருந்தது. 2016 ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபராக முதன்முறையாக டிரம்ப் பதவியேற்றபோது, குடியேற்றத்தைத் தவிர்ப்பதற்காக அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் ஒரு தடுப்புச் சுவர் கட்டப்படும் என்று டிரம்ப் கூறினார். இதையடுத்து டிரம்ப் கிறிஸ்தவர் அல்ல என்று, போப் கூறினார். போப்பின் இந்தக் கருத்துகள் அவமானகரமானது என்று டிரம்ப் பதிலளித்தார். இவ்வாறான பிரச்னைகள்தான், டிரம்ப்புக்கு மூன்றாவது வரிசையில் இருக்கை அளிக்கப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.


