
உத்தரப் பிரதேசம் உன்னாவில் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காரை நிபந்தனைப் பிணையில் வெளியில் விட்டதைக் கண்டித்துத் தில்லி உயர் நீதிமன்றம் முன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேசம் உன்னாவில் 17 வயதுச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அந்தப் பெண்ணின் தந்தையைக் காவல்நிலையத்தில் கொன்றதாக அப்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரணையைத் தில்லிக்கு மாற்றியது. இந்த வழக்கில் குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனையும் 25 இலட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தில்லி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துச் செங்கார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான். மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம் செங்காரின் தண்டனையை நிறுத்தி வைத்ததுடன் அவனைப் பிணையில் விடுவித்தது.
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியின் தந்தையைக் கென்ற கொலைகாரனைப் பிணையில் விடுவித்ததைக் கண்டித்துத் தில்லி உயர் நீதிமன்றத்தின் முன் ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், உயர் நீதிமன்றம் முன் போராட்டம் நடத்துவது சட்டவிரோதம் என்றும் அங்கிருந்து கலைந்துசெல்லுமாறும் அறிவித்தனர்.
கலைந்து செல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததுடன், ஜந்தர்மந்தருக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடவும் அறிவுறுத்தினர்.


