மதுரையில் நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதா?என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய அவருடைய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பெற்ற பிள்ளையை இழந்து நீதி கேட்டு போராடினால், வழக்குப் போடுவதும், மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரது உறவினரை விசாரணைக்கு வர சொல்லி சம்மன் அனுப்புவதும் எந்த வகையிலும் ஏற்க முடியாதது என்று கூறியுள்ளார். மாணவன் மறைந்து 12 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதிலாகப் போராட்டத்தை ஒடுக்குவதிலும் – வழக்குப் பதிவு செய்வதிலும் தான் காவல்துறைக் குறியாக இருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட்டு, மாணவன் மரணத்தில் நடந்தது என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா? அதற்கு காரணம் யார்? என்பதை எல்லாம் எந்த குறுக்கீடும் இல்லாமல் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், குறிப்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


