
தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் ஜோசப்விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையி;ல் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியதும், முதலமைச்சர் ஜோசப்விஜய் அரசின் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். அப்போது, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மக்களவை சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த 50 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டினுடைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டு, தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும் எனவும், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜோசப்விஜய் தீர்மானம் குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.
தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே, விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும். வரவிருக்கும் மக்களவை பொதுத் தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும், மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்தியது.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப்விஜய் முன்மொழிந்த அரசின் தனித்தீர்மானத்தின் மீது, தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்தன. பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தீர்மானத்தின் சில அம்சங்களை தே.மு.தி.க. எதிர்த்தது. இதில், பா.ஜ.க, அ.தி.மு.க., தே.மு.தி.க. ஆகியவை பெண்களுக்கான இடஒதுக்கீடு தீர்மானத்தை மட்டும் ஆதரித்தன.
அதன்பின்னர், தீர்மானம் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசின் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.



