
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு வரும்போதும் மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அக்கட்சியின் தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக அரசைப் புரட்டிப் போடப்போகும் புரட்சி நிகழ இன்னும் சில மாதங்களே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 1967, 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியோர், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார், மாற்றுத் திறனாளிகள் மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மனச்சாட்சி உள்ள மக்களாட்சி என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.


