த.வெ.க.வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் – ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

Advertisements

அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பிறகு, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர்கள் மூவரும் அக்கட்சியில் முறைப்படி இணைந்தனர் மற்றும் தங்களுக்கான உறுப்பினர் அட்டைகளைப் பெற்றுக் கொண்டனர்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த உடனேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து பனையூர் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்தார். அந்தச் சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், எம்.எல்.ஏ.க்கள் மூவரும் பதவியை ராஜினாமா செய்த பின்னரே தன்னைச் சந்தித்ததாகவும், முதலமைச்சரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

த.வெ.க. கட்சி அலுவலகத்தில் மட்டுமே அவர்கள் அதிகாரப்பூர்வமாகக் கட்சியில் இணைந்தனர் என்றும், தலைமைச் செயலகத்தில் ஒரு அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இது குதிரை பேரம் அல்ல என்று மறுப்பு தெரிவித்த அவர், கடந்த காலங்களில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்ததைச் சுட்டிக்காட்டி, மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்களை உடைத்துச் சேர்த்தால்தான் அது குதிரை பேரம் என்று விளக்கினார்.

எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வுடன் கூட்டு வைத்து முதலமைச்சராகத் திட்டமிட்டது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு வலியை ஏற்படுத்தியதாக விமர்சித்த அவர், தமிழக வெற்றிக்கழகத்தை ‘புதிய அ.தி.மு.க.’வாகக் கருதி, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல நிர்வாகிகள் தங்களிடம் பேசி வருவதாகக் கூறினார்.

தாங்கள் தூய்மையான ஆட்சியை நடத்துவதாகவும், அ.தி.மு.க. தொண்டர்களை அன்புடனும் நம்பிக்கையுடனும் வரவேற்பதாகவும் குறிப்பிட்ட அவர், வரும் இடைத்தேர்தல்களில் த.வெ.க. மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *