
சேலத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாளை நடைபெற உள்ள நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று காவல்துறை உத்திரவிட்டிருந்தது. இதுதொடர்பாகக், கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தனது சமூக வலைத்தளப் பதிவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்து கொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 998 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும், வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும், அனுமதிச் சீட்டு பெறாத கழகத் தோழர்களும், பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுகின்றோம் என்றும் பதிவிட்டுள்ளார்.


