
தமிழக மக்களின் வரிப்பணத்தை சுரண்டித் தின்றது போதாமல், எஞ்சிய ஓரிரு மாதங்களிலும் கமிஷன் அடித்து சுருட்டிக்கொள்ள திமுக அரசு திட்டமிடுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் திமுக அரசின் அடுத்த ஊழல் எனக் கூறி செய்தி வெளியிட்டுள்ளார். இதில், 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில், முன்கூட்டியே மாநில நெடுஞ்சாலை துறைக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, திமுக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார்.
வழக்கமாக அரசு டெண்டர்களை வெளியிட பல மாதங்களாகும் நிலையில், பிப்ரவரி மாதத்தில் மட்டுமே சென்னை மாநகராட்சி 248 டெண்டர்களை வெளியிட்டிருப்பது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார். நான்கரை ஆண்டுகளாக தமிழக மக்களின் வரிப்பணத்தை சுரண்டித் தின்றது போதாமல், எஞ்சிய ஓரிரு மாதங்களிலும் கமிஷன் அடித்து சுருட்டிக்கொள்ள திமுக அரசு திட்டமிடுகிறது எனக் குற்றம் சாட்டினார். விரைவில் ஊழல் மாளிகையான திமுகவிற்கு ஒட்டுமொத்த தமிழக மக்கள் பூட்டு போடுவர் என்று கூறினார்.


