
ஆத்தூரில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.4.61 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்நடைபெற்றுள்ளது. கடந்த வாரத்தைக் காட்டிலும் குவின்டாலுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், கல்லா நத்தம், கெங்கவல்லி, தலைவாசல், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 873 விவசாயிகள் 4,528 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த 17 வியாபாரிகள் மஞ்சளில் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர்.
இதில் விராலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக 16,389 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 20,889 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாகக் குவிண்டால் 14,589ரூபாய்க்கும் அதிகபட்சமாக 16,512 ரூபாய்க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சம் 28,389 அதி பட்சமாக 34, 199 ரூபாய் விலை போனது. 4528 மஞ்சள் மூட்டைகள் மூலம் 4 கோடியே 61 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
கடந்த வாரத்தைக் காட்டிலும் மஞ்சள் வரத்து கூடுதலாக இருந்த நிலையில் விராலி மஞ்சள் குவிண்டாலுக்கு 3000 ரூபாய் வரை குறைந்து விலை போனது. மேலும் உருண்டை மற்றும் பனங்காலி மஞ்சள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாததால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.


