Advertisements

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்களின் இரவு விருந்திலிருந்து, அவரது பாதுகாப்புப் படையினரால் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார். அங்கு திடீரென பலத்த சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சனிக்கிழமை மாலை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலின் விருந்து மண்டபத்தினுள் பலத்த வெடி சத்தம் கேட்டதை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் உள்ளிட்ட அங்கிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
சம்பவ இடத்திலிருந்து வெளியான காணொளிக் காட்சிகளில், பலத்த சத்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பங்கேற்பாளர்களும் குனிந்து தஞ்சம் புகுவதும், அதன் பிறகு அமெரிக்க அதிபர் தலைமை மேசையிலிருந்து அவசரமாக அழைத்துச் செல்லப்படுவதும் பதிவாகியிருந்தது.
பின்னர், ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் மேசையைச் சூழ்ந்துகொண்டனர். வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் தலைவரான வெய்ஜியா ஜியாங், நிகழ்ச்சி மீண்டும் தொடங்கும் என்றும், கூடுதல் விவரங்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின்போது உடனடியாக யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஜனாதிபதி டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அசோசியேட்டட் பிரஸ் வட்டாரம் தெரிவித்தது.
வெள்ளை மாளிகை செய்தியாளர்களின் இரவு விருந்தின்போது நடந்ததாக கூறப்படும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவர் காவலில் வைக்கப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப் இரவு விருந்தில் கலந்துகொண்டிருந்த ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒரு காவல் அதிகாரி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisements




