
வெனிசுலா நாட்டின் கடற்பகுதியில் ஓர் எண்ணெய் கப்பலைத் தங்கள் படையினர் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கரீபியன் கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தடுப்பதாகக் கூறிக்கொண்டு தனது கடற்படைக் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
அப்பகுதி வழியாக வரும் படகுகளை மறித்துக் கடத்தல்காரர்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், கைது செய்துள்ளதாகவும் அவ்வப்போது அமெரிக்கா செய்தி வெளியிட்டு வருகிறது.
இது தனது நாட்டுக்கு எதிரான செயல் என்றும் தனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சி என்றும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாசிங்டனில் வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப், வெனிசுலா கடற்பகுதியில் மிகப்பெரிய எண்ணெய்க் கப்பலைத் தங்கள் படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தார். அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டார்.


