
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று மாலை 5.40 மணிக்கு 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்ற நிலையில், விமானம் மேலே எழும்பியதும் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை.
இதன் காரணமாகத் திருச்சி விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்குவது என முடிவு செய்யப்பட்ட நிலையில், விமானத்தின் எரிபொருள் தீரும் வரை விமானம் வானில் வட்டமடித்தது. தொடர்ந்து, விமானம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 26 முறை வானில் வட்டமடித்தது. பின்னர் விமானம் 8.15 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
இந்த விமானத்தை விமானி இக்ரம் ரிபத்லி, சக விமானிகள் மைத்ரி ஶ்ரீகிருஷ்ணா, லைஷ்ராம் சஞ்சிதா தேவி, உள்ளிட்டோர் கொண்ட குழுவினர், பயணிகளிடம் அச்சத்தை வெளிப்படுத்தாமல் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பிலிருந்து, சாதுர்யமாக விமானத்தைத் தரையிறக்கினர்.
விமானம் தரையிறங்கியபோது திருச்சி விமான நிலையத்தில் கூடியிருந்த பயணிகளின் உறவினர்கள், விமான பயணிகள் கரகோஷங்களை எழுப்பித் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும், 144 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானிகள் குழுவுக்குச் சமூக வலைதளங்களில் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

