
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதற்காகத் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுப் பூசாரிகளின் பட்டியல் தயாரிக்கப்படும்.
அவர்களின் பெயர்கள் எழுதிய சீட்டுக்களில் இருந்து பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த சிறார்கள் குலுக்கல் முறையில் சபரிமலை, மாளிகைப்புறம் மேல்சாந்திகளைத் தேர்வு செய்வர்.
இந்த ஆண்டுக்கான மேல்சாந்திகள் தேர்வு இன்று நடைபெற்றது. சபரிமலை மேல்சாந்தி பட்டியலில் 14பேர் இடம்பெற்றிருந்த நிலையில் பந்தளம் அரண்மனையைச் சேர்ந்த காஷ்யப் வர்மா குலுக்கலில் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி மற்றத்தூர் குன்றைச் சேர்ந்த பிரசாத் நம்பூதிரியைச் சபரிமலை மேல்சாந்தியாகத் தேர்ந்தெடுத்தார்.
இதேபோல் பந்தளம் அரண்மனையைச் சேர்ந்த சிறுமி மைதிலி வர்மா மாளிகைப்புறம் மேல்சாந்தியாகக் கொல்லம் மய்யநாட்டைச் சேர்ந்த மனு நம்பூதிரியைத் தேர்தெடுத்தார். தேர்தெடுக்கபட்ட நம்பூதிரிகள் மண்டல மகரவிளக்குக் காலம் துவங்கி அடுத்த ஓராண்டுக்கு மேல்சாந்தியாகப் பூசைகள் செய்ய உள்ளனர்.


