
திருச்சி அரசு மருத்துவ மருத்துவமனையில் செவிலிய மாணவி உயிரிழந்த நிலையில் மாணவிக்கு அளித்த சிகிச்சையில் தவறு நடந்து இருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி அரசு மருத்துவ மருத்துவமனையில் புதுக்கோட்டைய சேர்ந்த பயிற்சி செவிலிய மாணவி சீதாலட்சுமி, மூக்கு வலி என அனுமதிக்கப்பட்ட நிலையில், தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக சக மாணவிகள் புகார் எழுப்பியுள்ளனர். இதன் காரணமாக, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி செவிலியர்கள் காலை முதலே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, செவிலிய மாணவி மரணம் தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் செவிலிய மாணவிகளிடம் உறுதி அளித்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, திருச்சி அரசு மருத்துவமனையில் மாணவிக்கு அளித்த சிகிச்சையில் தவறு நடந்து இருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மாணவிகளின் புகார்களை எழுதி வாங்கி இருக்கிறோம் என்றும் தற்காலிக நடவடிக்கைக்கு பரிந்துறைச் செய்யப்படும் என்றார். இதன் பின்னர், அமைச்சர் ரமேஷ் கொடுத்த வாக்குறுதியை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்ட செவிலிய மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலிய மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை விசாரணைக்குழு அமைத்துள்ளது. அதன்படி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் 3 மருத்துவர்கள் அடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டுள்ளன.




