
கோவையில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்..
கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி உயிர்மாய்க்கம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில், காவல்துறையினரிடமிருந்து தப்ப முயற்சித்த கார்த்திக், காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரையும் நீதிமன்றக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், கோவை ESI மருத்துவமனைக்கு வருகை தந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இது தொடர்பாக அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இதுபோன்ற செயல்களில் ஈடுபட அஞ்சும் வகையில் உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். காவல்துறை துரிதமாக செயல்பட்டு இருவரை கைது செய்துள்ளனர் என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் சம்பத்குமார், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு நிவாரணம் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.


