
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள், 18 உதவிக் கணக்கு அலுவலர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர்கள், உதவிக் கணக்கு அலுவலர்கள் பணிக்கு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தினர். அதன்மூலம் தேர்வு செய்யப்பட்ட உதவிப் பொறியாளர் 383 பேருக்கும், உதவிக் கணக்கு அலுவலர்கள் 18 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய், மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், எரியாற்றல் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கிட்டத்தட்ட மொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கையில் பாதி, அதாவது 70 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிவித்தார். அவற்றில் இந்த ஆண்டு இறுதிக்குள் 15 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உறுதியளித்தார். கடந்த 25 ஆண்டுகளாகச் சீரழிக்கப்பட்ட மின்துறையை மீண்டும் தலைநிமிரச் செய்ய உள்ளதாகக் கூறினார்.
மின்துறை பற்றிய வெள்ளை அறிக்கையை நாளை வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார். இந்தத் தவெக அரசு மக்களுக்குப் பயந்து செயல்படுமேயன்றி வேறு யாருக்கும் பயப்படாது என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.
அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மின்வாரியப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


