
சென்னை : அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த விலையில் உணவு பொருட்கள்ரேஷன் கடைகளில் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டு அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பெற முக்கிய தேவையாக உள்ளது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாகப் புதிய அட்டைகள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களில் பயன் பெற முடியாமல் மக்கள் தவித்து வந்தனர்.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. முழு நேர நியாய விலை கடைகள் 26 ஆயிரத்து 502 உள்ளது.பகுதிநேர கடைகள் 10,452 என மொத்த கடைகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 954ஆக உள்ளது. இதனிடையே புதிய ரேஷன்கார்டு கோரி 2லட்சம் 81 ஆயிரம் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களின் மீது தொடர்ந்து பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) மீண்டும் புதிய அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் குடும்ப அட்டையில் மாற்றம், புதிய அட்டைக்கான விண்ணப்பத்தை www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


