Edappadi K. Palaniswami Accusation: தி.மு.க.அரசு திட்டமிட்டு செயல்படாததால் மக்கள் அவதி!

தி.மு.க., ஆட்சியில் திட்டமிட்டு செயல்படாததால் மக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.

கனமழையால் பாதித்த பெருங்குடி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் இ.பி.எஸ்., ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக ஆட்சியில் வேடிக்கை நடக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் பருவமழை துவங்குவதற்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, மக்கள் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் தவிக்கின்றனர்.

திமுக ஆட்சியில் திட்டமிட்டு செயல்படாததால் மக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர். எப்போது மோட்டார் வாங்கி, எப்போது தண்ணீரை வெளியேற்றுவார்கள்?. ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்து ஏன் தண்ணீர் வடியவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். திமுக ஆட்சியில் நேற்று தான் மீட்பு பணிகளுக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வானிலை மையம் முன்பே எச்சரித்தும் தற்போதைய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. முறையாக வடிகால் வசதி செய்யவில்லை. உணவு, குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எல்லாம் செய்து விட்டதாக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். இயற்கை வெள்ளம், செயற்கை வெள்ளம் என முதல்வர் ஸ்டாலின் கண்டுபிடித்துள்ளார். அவருக்கு நோபல் பரிசு தான் கொடுக்க வேண்டும். இவ்வாறு இ.பி.எஸ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *