
சாதி என்னும் சதியால் கல்வி மறுக்கப்பட்ட நிலையில் சாதி எனும் சதிக்கு எதிராக நிகழ்ந்த புரட்சி வேகமாக நடைபோடுகிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் வர வேண்டும் என்பது தான் முக்கியம் என்றும் ஆயிரம் ஆண்டுகளாக சாதி என்னும் சதியால் கல்வி மறுக்கப்பட்ட நிலையில் சாதி எனும் சதிக்கு எதிராக நிகழ்ந்த புரட்சி வேகமாக நடைபோடுகிறது என்று தெரிவித்தார்.
மாணவர்கள் படித்து முன்னேறும்போது அவர்களுடைய குடும்பமும் முன்னேறுகிறது என்றும் குடும்பங்கள் முன்னேறினால் மாநிலங்கள் முன்னேறும், மாநிலங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்வதற்காக தான் பல திட்டங்களை செயல்படுத்திவருவதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, மாணவர்களை கொண்டாடும் வகையில் தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடத்தப்படுகிறது என்றும் உழைப்புக்கான பலன் கண் முன்னே தெரிவதைக் கண்டு பெருமைப்படுவதாகவும் கூறினார்.



