
திருப்பூரில் குடியிருப்புப் பகுதியில் கழிவுகள் குவிப்பதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வெளியேற்றினர்.
திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் கழிவுகளை முதலிப்பாளையத்தில் கல்குவாரியில் குவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் தீயநாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவுவதாகவும் சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் கழிவுகளைக் குவிப்பதைக் கண்டித்துப் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் விடுவித்தபோது மண்டபத்தை விட்டு வெளியேறாமல் அவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

